2003ஆம் ஆண்டு ஷாருக்கான் மற்றும் பிரீத்தி ஜிந்தா நடித்த ‘கல் ஹோ நா ஹோ’ திரைப்படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதில், ஷாருக்கான் அமன் என்ற கதாப்பாத்திரத்திலும், பிரீத்தி ஜிந்தா நைனா கேதரின் கபூர் என்ற கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் இருவரின் நடிப்பும் பாராட்டப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் இப்படம் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. அதை திரையில் பார்த்த ரசிகர்கள், தங்கள் உணர்ச்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர். அதில், ஒருவர் “இந்தப்படத்தை எப்போது பார்த்தாலும் குழந்தைப் போல அழுகிறேன். நீங்கள் எங்களுக்குப் போல் அழுகிறீர்களா?” என்று பிரீத்தி ஜிந்தாவிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த நடிகை பிரீத்தி ஜிந்தா, “ஆம், அந்தப் படத்தை பார்க்கும்போதும், அதை படமாக்கும் போது கூட நான் அழுதேன். என் முதல் காதலர் ஒரு கார் விபத்தில் இறந்தார். அதனால் இந்த படம் எனக்கு எப்போதும் நெருங்கியதாக இருக்கும். இதில் வேடிக்கையான உண்மை என்னவென்றால், பெரும்பாலான காட்சிகளில் அனைவரும் இயல்பாகவே அழுதனர். குறிப்பாக அமனின் மரணக் காட்சி, கேமராவின் முன்னும் பின்னும் அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியது,” என்று கூறினார். மேலும், அவர் தனது 13-வது வயதில் தனது தந்தை துர்கானந்த் ஜிந்தாவை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ராணுவ அதிகாரியாக இருந்த அவர், ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.