நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “எம்புரான்” படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான “லூசிஃபர்” படத்தின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்ட இரண்டாம் பாகமாகும். ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கதையை முரளி கோபி எழுதியுள்ளார். இயக்குனராக மட்டுமல்லாது, பிருத்விராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
“எம்புரான்” படம் திரைக்கு வருவதற்கு முன்னதாகவே, இயக்குனரும் நடிகருமான பிருத்விராஜ், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரது வாழ்த்தைப் பெற்றிருந்தார். ரசிகர்களிடம் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, “எம்புரான்” நேற்று திரையரங்குகளில் வெளியாகியது. குறிப்பாக, கேரளா மாநிலத்தில் மட்டும் இப்படம் 746 திரையரங்குகளில் வெளியானது.
இதனையடுத்து, இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.22 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மலையாள சினிமாவில் இதுவரை அதிக முதல் நாள் வசூல் ஈட்டிய படமாக இருந்தது பிருத்விராஜ் நடித்த “ஆடு ஜீவிதம்” படம். அந்தப் படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் ரூ.8.95 கோடி வசூலித்திருந்தது. அதற்கு முந்தைய நிலையில் “லூசிஃபர்” படம் 2019-ல் முதல் நாளில் ரூ.6.10 கோடி வசூலித்தது. இவை அனைத்தையும் மிஞ்சி, “எம்புரான்” திரைப்படம் வெளியான முதல் நாளில் சாதனை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.