தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடித்த ‘அமரன்’ திரைப்படம், ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து அவரது திரை பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. அவரது அடுத்த இரண்டு திரைப்படங்கள், முருகதாஸ் இயக்கும் ‘மதராஷி’ மற்றும் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ ஆகியவை அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் ‘குட்நைட்’ இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், விநாயக் சந்திரசேகரன் இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயனின் தந்தையாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை நடிக்க தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளனர் என்றும், மோகன்லாலும் இப்படத்திற்கு ஒப்பந்தமானதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், மோகன்லால் தற்போது பல திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால், இந்த படம் துவங்குவதில் தாமதம் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த தாமதத்தை காரணமாகக் கொண்டு, வெங்கட் பிரபு இயக்கும் படத்தை முதலில் தொடங்க சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.