இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிசாசு’ மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விஜய் சேதுபதி சிறப்புப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர்களுடன் பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் கார்த்திக் ராஜா. சில மாதங்களுக்கு முன்பு வெளியான டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக இருக்கிறது.ஆனால், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதம் அடைந்துள்ளது. வழக்கு காரணமாக மூன்று ஆண்டுகளாக படம் திரைக்கு வராமல் இருக்கிறது.
இந்த நிலையில், ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது: “பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். அவரது உழைப்பிற்காகவே இந்த படம் திரைக்கு வர வேண்டும். தற்போது தயாரிப்பாளர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். என் இயக்கத்தில் உருவான ‘டிரெயின்’ படம் திரைக்கு வந்த பிறகு தான் ‘பிசாசு 2’ வெளியாகும்,” என தெரிவித்தார்.