நடிகை ஷோபனா சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மற்றும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மோகன்லாலின் ‘தொடரும்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷோபனா. தற்போது அவர் தொடர்ந்து பல பேட்டிகளில் பங்கேற்று வருகிறார். அதில், தனது திரையுலக அனுபவங்களில் சில சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார். இதில், பாலிவுட்டில் தன்னை அவமதித்த சம்பவம் குறித்து கூறியதோடு, அந்த நேரத்தில் அமிதாப்பச்சன் தனக்கு கொடுத்த ஆதரவையும் நன்றியுடன் கூறியுள்ளார்.

அதைப் பற்றிச் சொல்லும்போது, அமிதாப்பச்சன் நடித்த ஒரு ஹிந்தி படத்தில், ஒரு பாடலுக்கான சிறிய காட்சியில் நான் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பு அகமதாபாத்தில் நடைபெற்றது. அந்த பாடல் காட்சிக்காக நான் பல உடைகளை அணிந்து நடித்தேன். அன்றைய படப்பிடிப்பின் போது அமிதாப்பச்சனைப் பார்க்கவே பெருமளவிலான மக்கள் வந்து கூடியிருந்தனர். எனவே, எனக்கு ஒதுக்கப்பட்ட கேரவன் எங்கே என்று படக்குழுவினரிடம் கேட்டேன். அதற்கு ஒருவர், இவர் மலையாள நடிகைதானே, எப்படி இருந்தாலும் சமாளித்து கொள்வார். அந்த மரத்துக்கு பின்னால் போய் உடைமாற்றச் சொல்லுங்கள்’ என கூறினார்.
அந்த நேரத்தில், அமிதாப்பச்சன் தனது கேரவனில் இருந்தபோது, அந்த வார்த்தைகள் அவருடைய வாக்கி-டாக்கியின் மூலம் கேட்ட உடனே அவர் கோபமாக வெளியே வந்தார். ‘யார் இப்படிச் சொன்னது?’ என சத்தமிட்டார். மொத்த படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது. பின்னர், அவர் என்னை அழைத்து தன் கேரவனில் உடைமாற்றச் சொல்லிவிட்டு, அவர் வெளியே சென்று நாற்காலியில் அமர்ந்தார் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் ஷோபனா.