தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெளியாகும் தேதி செப்டம்பர் மாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குப் பிறகு, சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் இந்திய அரசியலமைப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அதற்குப் பிறகு கண்ணூரில் நடைபெற்ற கலாச்சார விழாவில், கேரள முதல்வருடன் அவர் கலந்துகொண்டார்.இந்த சந்திப்பைத் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கண்ணூர், பினராயியில் நடைபெற்ற ‘பினராயிபெருமா’ கலை மற்றும் கலாச்சார விழாவில் அழைப்பு பெற்றதிலும், அதில் கலந்துகொண்டதிலும் எனக்கு மிகுந்த பெருமை ஏற்பட்டது. கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், சபாநாயகர் ஷம்சீர், அன்புக்குரிய ஆசிப் அலி மற்றும் ‘தி இந்து’ பத்திரிகையின் ராம் ஆகியோருடன் மேடையை பகிர்ந்து கொண்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் என்னை உண்மையாகவே நெகிழச்சியடையச் செய்தது. இந்த நினைவுகள் என்றும் மறக்கமுடியாதவை. இதற்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.