தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு தமிழில் ‘கடல்’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘காற்றின் மொழி’ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
சினிமாவைத் தாண்டி சமூக சேவைகளிலும் ஈடுபடுபவர். இதற்கு முன்பே, அரசு பள்ளிகளை தத்தெடுத்து, மாணவர்களுக்கு உதவிகளை செய்து வந்தார். தற்போது தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்து, அங்கு பணிகளைச் செய்து வருகிறார். இதுகுறித்து லட்சுமி மஞ்சு கூறுகையில், “நான் இதற்கு முன்பு 30 பள்ளிகளை தத்தெடுத்திருந்தேன். தற்போது மேலும் 20 பள்ளிகளை தத்தெடுத்திருக்கிறேன்.
மொத்தம் 50 பள்ளிகளை தத்தெடுத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். தனியார் பள்ளிகளில் இருக்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் கொண்டு வரவே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். குறிப்பாக, பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். கடந்த வருடம் 30 பள்ளிகளுக்கு இவ்விதமான வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். எத்தனையோ பேர் நல்ல நிலையில் உள்ளவர்களாக இருக்கலாம். அவர்களும் ஒருவர் ஒரு பள்ளியை தத்தெடுத்தால், அதை ஊரையே மாற்றி விடலாம்,” என கூறினார்.