1998-ஆம் ஆண்டு முரளி நடித்த ‘கனவே கலையாதே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் வ.கவுதமன். பின்னர் 2010-ஆம் ஆண்டு ‘மகிழ்ச்சி’ என்ற படத்தை தனது இரண்டாவது படமாக இயக்கினார். தற்போது வி.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய திரைப்படத்தை இயக்குவதுடன், அதில் கதாநாயகனாகவும் அவர் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகிறார். இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் மேற்கொள்கிறார், பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதன் தொடக்கத்தில் ‘மாவீரா’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் தற்போது ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படம் ஒரு வீரபெரும் நபரின் உண்மை வாழ்க்கை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. மண்ணையும் மானத்தையும் காக்க தன்னம்பிக்கையோடு, நீதியோடு போராடிய ஒரு வீரரின் வாழ்க்கை இந்த படத்தின் கருப்பொருளாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடல் “புலிக்கொடி” சமீபத்தில் வெளியிடப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாமக முன்னாள் தலைவரான காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படத்தின் மீது தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்காக இயக்குனர் கவுதமன் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைப்படம் கடந்த 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கு காரணமாக வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ‘படையாண்ட மாவீரா’ படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.