‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியா வாரியர், ஒரே ஒரு கண் சிமிட்டும் காட்சியால் நாடு முழுவதும் பிரபலமானார். கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த இவர், மோகினியாட்டக் கலைஞராகவும் இருந்து வருகிறார். மலையாளத்தைத் தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ள அவர், தமிழில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, ‘குட் பேட் அக்லி’, ‘சர்வம் மாயா’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலில் அவர் நடனமாடிய காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து, அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகவுள்ள ‘டேர் டெவில்’ படத்திலும் பிரியா வாரியர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கும் பிரியா வாரியர், அவ்வப்போது கேள்வி-பதில் நிகழ்வுகளையும் நடத்தி வருகிறார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், “நீங்கள் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்க இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள்? நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்!” என பதிலளித்துள்ளார். அவரது இந்த பதில் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
—
