ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கை மற்றும் இசைப் பயணத்தைப் பதிவு செய்யும் புதிய புத்தகத்தை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார். ரூபா சக்கரவர்த்தியுடன் இணைந்து ‘ரஹ்மான் – எ ரினைசன்ஸ்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகத்தை எழுத இருப்பதாக அவர் தனது சமீபத்திய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தனது இசை உலகை உருவாக்கிய அனுபவங்கள், சிந்தனைகள், எதிர்கொண்ட சவால்கள், சந்தித்த ஆளுமைகள் மற்றும் படைப்புப் பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் என ரஹ்மான் கூறியுள்ளார். மேலும், இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு இளையராஜா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றிய ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் 1992-ல் வெளியான ‘ரோஜா’ திரைப்படத்தின் மூலம் தனி இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு மணிரத்னத்துடனான அவரது கூட்டணி பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான், தொடர்ந்து பல தேசிய விருதுகளுடன் கிராமி, கோல்டன் குளோப் உள்ளிட்ட சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய இசையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
