ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் – 2’ திரைப்படம் கடந்த மார்ச் 19-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதன் முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரூ.2,000 கோடி வசூல் என்ற மாபெரும் சாதனையை எட்டியது.
திரையரங்க வெற்றிக்குப் பின்னர் ‘துரந்தர்’ திரைப்படம் ஜப்பானிலும் வெளியானது. கடந்த ஜூலை 10-ம் தேதி அந்நாட்டில் 80 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டிருந்தனர். இருப்பினும், அங்குள்ள ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவுக்கு படம் வரவேற்பைப் பெறவில்லை என்றும், இதன் காரணமாக டிக்கெட் விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதற்கிடையில், ஓடிடி வெளியீட்டிலும் ‘துரந்தர்’ குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட படமாக ‘துரந்தர்’ உருவெடுத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரன்வீர் சிங் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
