2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘வதந்தி’ வெப் தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கிய அந்த தொடரை புஷ்கர் – காயத்ரி தயாரித்திருந்தனர். எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ‘வதந்தி 2 – மணியின் மர்மம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது.
சசிகுமார், யஷ்வந்த், ரேவதி சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடர் இன்று (ஆகஸ்ட் 7) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. ஆனால் வெளியீட்டுக்கு முன்பே இது சர்ச்சையில் சிக்கியது. தொடரில் ‘முடக்கத்தான் மணி’ என்ற பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, மதுரையைச் சேர்ந்த பிரபல மாடுபிடி வீரரும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையத் தலைவருமான முடக்கத்தான் மணி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இந்த சூழலில், நடிகர் சசிகுமார் நேரில் சென்று முடக்கத்தான் மணியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த அவர், தொடரில் அந்தப் பெயர் எந்தவித அவமதிப்புடனும் பயன்படுத்தப்படவில்லை என்று கூறினார். “நான் ‘காரி’ படத்தில் நடித்திருக்கிறேன். மதுரைக்காரனாக ஜல்லிக்கட்டின் மரபும், மாடுபிடி வீரர்களின் உணர்வுகளும் எனக்கு தெரியும். ‘மணி’ என்ற பெயர் வைத்திருப்பவர்கள் இந்த தொடரைப் பார்த்தால் மகிழ்ச்சியடைவார்கள். ஜல்லிக்கட்டையோ மாடுபிடி வீரர்களையோ தவறாக சித்தரிக்கும் முயற்சியை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்” என்று சசிகுமார் தெரிவித்துள்ளார்.
