முதல்வர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் நடிப்பில் இயக்கியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. சிக்மா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜேசன் சஞ்சயிடம், அவரது தந்தை முதல்வர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “அப்பாவின் வெற்றியால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அது எனக்கும், என் சகோதரிக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் கூடுதல் பொறுப்பை தந்துள்ளது” என்றார்.
மேலும், “அந்தப் பொறுப்பை முன்னெடுத்து செல்லும்போது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்” என்றும் கூறினார். தனது தனிப்பட்ட பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “நான் என் சொந்த அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்றே அப்பா எப்போதும் விரும்பினார். நானும் அதையே விரும்பினேன்” என தெரிவித்துள்ளார். அத்துடன், “உனக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் நீயே வந்து கேட்க வேண்டும்; நான் வந்து கேட்க மாட்டேன் என்று அப்பா கூறியிருந்தார்” என்றும் அவர் பகிர்ந்துள்ளார்.
