கடந்த வாரம் தெலுங்கு திரையுலகில் நடிகர் ராம்சரண் நடிப்பில், புச்சிபாபு சனா இயக்கத்தில் வெளியாகிய ‘பெத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. கிரிக்கெட் மற்றும் மல்யுத்தம் ஆகிய விளையாட்டுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 393 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், திரையரங்குகளில் படத்தின் வெற்றிகரமான ஓட்டம் தொடர்ந்து நீடித்தால், விரைவில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கணித்துள்ளன.
இதேவேளை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராம்சரணின் தந்தையும் மூத்த நடிகருமான சிரஞ்சீவி நடித்த ‘மன சங்கர வர பிரசாத் காரு’ திரைப்படமும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை பெற்று பாக்ஸ் ஆபீஸில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து வசூல் சாதனைகளை நிகழ்த்தியிருப்பது தெலுங்கு திரையுலகில் மிகவும் கவனத்தை ஈர்க்கும் விஷயமாக மாறியுள்ளது.
