‘மீசை முறுக்கு 2’ படத்தின் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், பேசிய ஹிப்ஹாப் ஆதி, முதல் பாகம் தனது வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் முழுவதும் ஒரு இசைக் கலைஞனின் பயணத்தையும் இசை உலகையும் மையமாகக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். படத்தில் பாபா பாஸ்கர் முக்கியமான தந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், மறைந்த நடிகர் விவேக் நடித்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும், இந்தக் கதாபாத்திரத்திற்கு பாபா பாஸ்கர் பொருத்தமாக இருப்பார் என்ற நம்பிக்கையிலேயே அவரை தேர்வு செய்ததாகவும் கூறினார். இப்படத்திற்குப் பிறகு அவர் சிறந்த நடிகராகவும் கவனம் பெறுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஹிப்ஹாப் இசை மேற்கத்திய நாடுகளின் தெரு இசையிலிருந்து உலகளவில் பிரபலமானதைப் போல, தமிழர்களின் கானா இசையும் சர்வதேச அளவில் கொண்டாடப்பட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ஆதி தெரிவித்தார். கானாவை வெறும் உள்ளூர் இசையாக பார்க்கக்கூடாது என்றும், அது மக்களின் வாழ்க்கையையும் உணர்வுகளையும் பதிவு செய்யும் முக்கியமான கலை வடிவம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்காக மூன்று வெவ்வேறு காலங்களின் கானா இசையை பிரதிபலிக்கும் வகையில் படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
‘மீசை முறுக்கு 2’ வெளியான பிறகு கானா கலைஞர்களுக்கான அங்கீகாரமும், அந்த இசை குறித்த பார்வையும் மேலும் நேர்மறையாக மாறும் என்ற நம்பிக்கையையும் ஆதி வெளிப்படுத்தினார்.
