தமிழ் சினிமாவில் ‘இயக்குநர் இமயம்’ என்று போற்றப்பட்ட பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கும், கலை உலகிற்கும் பெரும் இழப்பாக கருதப்படுகிறது. சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அவருடன் இணைந்து பணியாற்றிய பலரும் அவரது மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்தனர்.
அதேபோல் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், சூர்யா, சிவக்குமார், கார்த்தி, நாசர், ராதிகா, இளையராஜா, கங்கை அமரன், தனுஷ், கவுண்டமணி, பாக்யராஜ், பாண்டியராஜன், மாரி செல்வராஜ், ராதா, பி.வாசு, ரேகா, சுகன்யா, அருண் பாண்டியன், ஜீவா, ராகவா லாரன்ஸ், சித்தார்த், ரம்யா பாண்டியன், கஸ்தூரி, ராஜா, விஜய் சேதுபதி, தியாகராஜா குமாரராஜா, ஆர்.வி. உதயகுமார், விக்ரமன், லோகேஷ் கனகராஜ், ஹரி உள்ளிட்ட ஏராளமான திரையுலகக் கலைஞர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.
நேற்று இரவு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்ட பாரதிராஜாவின் உடல், இன்று காலை தேனி மாவட்டம் காட்ரோடு பகுதியில் அமைந்துள்ள அவரது பண்ணைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 3 மணிக்குப் பிறகு பாரதிராஜாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது பாரதிராஜாவின் இறுதி நிகழ்வில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
—
