மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால், தனது திரைப்பயணத்தை உதவி இயக்குநராக தொடங்கி சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக்கொண்டார். அதன் பின்னர் நடிகராக அறிமுகமான அவர் இதுவரை சுமார் நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பு மற்றும் தனித்துவமான தேர்வுகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பிரணவ், மலையாள சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.
அவர் நடித்த திரைப்படங்களில் மூன்று படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இடையில் நீண்ட இடைவெளியை எடுத்துக்கொள்வது அவரது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக படப்பிடிப்பு முடிந்ததும் அல்லது திரைப்படம் வெளியானதும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு தனியாக பயணம் மேற்கொண்டு நீண்ட காலம் சுற்றுலா செல்வதை அவர் விரும்புகிறார். அவரை வைத்து திரைப்படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் காத்திருக்கும் நிலையிலும், தனது விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் பிரணவின் இந்த அணுகுமுறை குறித்து சமீபத்தில் நடிகர் மோகன்லால் மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுகுறித்து மோகன்லால் கூறுகையில், “குடும்பத்திற்காக கடினமாக உழைக்க நான் ஒருவன் இருப்பதே போதும் என்று பிரணவ் நினைத்துவிட்டார் போலிருக்கிறது” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் பேசுகையில், “பிரணவின் தற்போதைய வயதில் இருந்தபோது நானும் சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி உலகம் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பல காரணங்களால் அந்த ஆசையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது என்னால் நிறைவேற்ற முடியாத அந்த கனவை, பிரணவ் தனது வாழ்க்கையின் மூலம் நிறைவேற்றி வருகிறார். அவர் தனது விருப்பப்படி வாழ்வதில் எங்கள் குடும்பத்தினருக்கு முழுமையான சம்மதம் உள்ளது. நமது பிள்ளைகளின் வாழ்க்கையை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்கள் விரும்பும் பாதையில் அவர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும். பிரணவ் தனது மனதுக்குப் பிடித்தபடி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
—
