மலையாள திரையுலகில் இருந்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஈடன் குரியகோஸ், ‘மிஸ் கேரளா’ பட்டத்தை வென்ற உடனேயே தமிழ் திரைப்பட உலகில் தனது பயணத்தை தொடங்கினார். அவர் முதன்முதலில் ‘ஆண்டவ பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘இருக்கு ஆனா இல்ல’, ‘பனி விழும் நிலவு’, ‘ஏன்டா தலையில் எண்ண வைக்கல’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் மலையாள திரையுலகிற்கு திரும்பிய அவர், அங்கு பல்வேறு திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
மலையாளத்தில் ‘காட்டுமாக்கன்’ திரைப்படத்தில் நடித்த அவர், இயக்குநர் துளசிதாஸ் இயக்கிய ‘கேர்ள்ஸ்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதுமட்டுமின்றி, ‘மாயத்திரை’ மற்றும் ‘குருதிக்காலம்’ ஆகிய வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள மொழிகளைத் தொடர்ந்து தெலுங்கிலும் தனது தடத்தை பதித்துள்ள அவர், ‘ஸ்ரீரஸ்து சுபமஸ்து’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் ‘துரிதம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் புதிய வாய்ப்புகளுடன் தனது திரைப்பயணத்தை தொடரத் தயாராகி வருகிறார்.
இதுகுறித்து ஈடன் குரியகோஸ் கூறுகையில், “சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய தொடக்கத்தைப் போல தமிழில் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அதேபோல் மலையாளத்திலும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். இதன் மூலம் என் திரைப்பயணத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. தயாரிப்பு நிறுவனங்களின் சார்பில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். நல்ல கதையம்சம் கொண்ட தரமான திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. மேலும், தினந்தோறும் திரைப்படங்களை பார்த்து புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு என்னை மேம்படுத்திக் கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
