நடிகர் சூர்யா நடித்த ‘கருப்பு’ திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகளவில் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ள இந்த திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ள இப்படம், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் வணிக ரீதியாக லாபகரமான திரைப்படமாக அமைந்துள்ளது. மேலும், சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையையும் ‘கருப்பு’ பெற்றுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த திரைப்படத்தில் நடிகர்கள் இந்திரன்ஸ் மற்றும் அனகா ரவி ஆகியோரின் நடிப்பும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக தனது மகளின் சிகிச்சைக்காக போராடும் தந்தையாக நடித்த இந்திரன்ஸ், பணத்தை இணைய வழியில் செலுத்தத் தெரியாமல் தவிக்கும் காட்சியில் பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்தார். அவரது இயல்பான நடிப்பு ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட காரணம் குறித்து இந்திரன்ஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி என்னிடம் கதையை விவரித்தபோது, எனது கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதை உணர்ந்தேன். கேரளாவில் இருந்து தங்கள் குழந்தைகளின் சிகிச்சைக்காக சென்னை வரும் பல தந்தைகளின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் அது. அப்படிப்பட்ட ஒரு தந்தையாக நடிக்கும்போது, நடிகராக எனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதை புரிந்துகொண்டேன்.
அந்த நேரத்தில் மலையாளத் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்ததால், ‘கருப்பு’ படத்திற்கான தேதிகளை ஒதுக்குவது சற்று சிரமமாக இருந்தது. இருந்தபோதிலும், என் பணித் திட்டங்களை மாற்றியமைத்து இந்த திரைப்படத்தில் நடித்தேன். அந்த முடிவு இன்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
