இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்பட ரிலீஸ் தொடர்ந்து தாமதமாவது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் ஆர்ஜே பாலாஜி சமீபத்தில் முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார்.
அதில், கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் பணிகளை மீண்டும் ஆரம்பித்து இருக்கிறோம். ‘இதே அப்டேட்டை தான் மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்’ என்று சூர்யா ரசிகர்கள் வேதனையில் இருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இந்த காத்திருப்புக்கு உரிய பதிலாக படம் இருக்கும், என்றார்.
மேலும், நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த படத்தில் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டு இருக்கிறேன். இனிமேலும் அதிக நேரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து உறுதியான தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். ஆனால் ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகாது.
அதேபோல் எனக்கும் தயாரிப்பாளர் பிரபுவுக்கும் சண்டை, இருவரும் சண்டையிடும் வீடியோ, அவர் மீது வழக்கு போடப் போகிறேன், இசையமைப்பாளருடன் சண்டை, தயாரிப்பாளர்களுக்குள் சண்டை என்று பல விஷயங்கள் பேசப்படுகிறது. ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பதால் அவர்களுக்கு கோபம் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து 10 நாட்களுக்குள் சரியான தகவலுடன் வருகிறேன். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும்,” என்று ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
