‘ஜமா’ திரைப்படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் தற்போது கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘அன்பே டயானா’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் யுவராஜ் கணேசன் மற்றும் சத்யா கரிகாலன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்ததுடன், கதை மற்றும் திரைக்கதையையும் எழுதி, இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், நடிகை ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முழுநீள கதாபாத்திரத்தில் மீண்டும் திரையில் தோன்றுகிறார். அவருடன் சேத்தன், பரிதாபங்கள் புகழ் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஷெல்லி கேலிஸ்ட் மேற்கொண்டுள்ளார். தற்போது இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது , வியாசர்பாடி மற்றும் பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞனே இந்தக் கதையின் நாயகன். அவரது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர்கள். இருப்பினும், அவற்றை வெளிப்படுத்தாமல் தன்னம்பிக்கையுடன் வாழும் இளைஞனாக அவர் சித்தரிக்கப்படுகிறார். இப்படியான சூழலில், அவர் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணை காதலிக்கத் தொடங்குகிறார்.கலாசாரம், மொழி, வாழ்க்கை முறை போன்ற பல்வேறு வேறுபாடுகள் நேருக்கு நேர் மோதும் போது உருவாகும் நிகழ்வுகள் நகைச்சுவையுடனும் பரபரப்புடனும் நகர்கின்றன. காதல், குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவை அம்சங்கள் அனைத்தும் கலந்த அமைப்பில் திரைக்கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
