சின்னத்திரை நிகழ்ச்சியான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுடன் கலந்து கொண்டு கவனம் பெற்றவர் நடிகை அபர்ணதி. அந்த நிகழ்ச்சியின் மூலம் அவர் பொதுமக்களிடையே பரிச்சயமான முகமாக மாறினார். இதனைத் தொடர்ந்து ‘தேன்’, ‘ஜெயில்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார். குறிப்பாக ‘இறுகப்பற்று’ திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் ஆர்யாவுடன் இணைந்து திரைப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று அபர்ணதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் தனது கருத்தை தெளிவாக பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், “ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் 100 நாட்கள் நடிகர் ஆர்யாவுடன் பயணம் செய்துள்ளேன். அந்த அனுபவம் எனக்கு நல்ல நினைவுகளை அளித்தது. அதனால் தேவையற்ற கற்பனை கதையை உருவாக்கி காதல் கதாபாத்திரமாகவோ அல்லது தங்கை கதாபாத்திரமாகவோ மீண்டும் இணைந்து நடிக்க விருப்பமில்லை. அதனால்தான் ஆர்யாவுடன் படம் செய்யும் எண்ணம் எனக்கு இல்லை,” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
