அரவிந்த் சாமி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மவுனப் படம் ‘காந்தி டாக்ஸ்’ இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘தளபதி’ திரைப்படம் மூலம் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான அரவிந்த் சாமி, அதன் பின்னர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
அதே நேரத்தில், 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு, தொழில்துறையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினார். 2005ஆம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் சிக்கிய நிலையில், அதில் அவரது கால்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, சுமார் ஐந்து ஆண்டுகள் வரை அவர் படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக, சமீபத்தில் மெல்போர்ன் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பேசிய போது அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார். அந்த கடினமான காலகட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது, 2005ல் ஒரு விபத்தில் சிக்கிய எனக்கு கால்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. “கடைசி வாய்ப்பாக காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்யலாம், அதன் பிறகு நடக்க முடிந்தாலும் முடியாமல் போகலாம் என்ற நிலைதான் இருந்தது. அந்த சூழ்நிலையில் தான் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பு, கேரளாவைச் சேர்ந்த ஒரு ஆயுர்வேத வைத்தியரை சந்திக்க நேர்ந்தது. அங்கிருந்தே ஆயுர்வேத சிகிச்சையின் மீது எனது நம்பிக்கை வலுவாக உருவானது. நம்ப முடியாத அளவுக்கு, மூன்றே நாட்களில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நான் மீண்டும் நடக்கத் தொடங்கினேன்.
அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த சமயத்தில்தான், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சினிமா வாய்ப்பு என் கதவைத் தட்டியது. அதற்கு முன்பு அந்த 13 ஆண்டுகளிலும், நான் மனதளவில் சினிமாவில் நடிக்கத் தயாராகவே இல்லை. ஒருபக்கம் உடல் எடை அதிகரித்ததும், முடி கொட்டியதும் கூட அதற்கான காரணங்களாக இருந்தன” என்று அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
