நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, சினிமாவில் மட்டுமல்லாமல் கார் பந்தயத்திலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் அஜித். கடந்த ஆண்டு அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச கார் பந்தய போட்டிகளில் தனது அணியினருடன் இணைந்து பங்கேற்றிருந்தார். தற்போது, 24 ஹெச் சீரிஸ் – மத்திய கிழக்கு டிராபிக்கான (Middle East Trophy) கார் பந்தய தொடரிலும் அவர் கலந்துகொண்டு வருகிறார்.
இந்த நிலையில், துபாய் ரேஸிங் களத்தில் நடிகர் அஜித்தை சிபி சத்யராஜ், இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா தம்பதியினர் உள்ளிட்ட பலர் சந்தித்தனர். அதேபோல் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் துபாயில் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
