தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிம்பு, ‘பத்து தல’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ‘எஸ்.டி.ஆர். 48’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. சிம்பு இதில் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார். படம் பீரியாடிக் டிராமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் சில மாதங்களுக்கு அந்த படத்தைக் குறித்து எந்த தகவல்களும் வெளிவரவில்லை. தற்போது, இப்படத்தை குறித்து கலை இயக்குனரான எஸ்.எஸ் மூர்த்தி ஒரு அப்டேட்டை கொடுத்துள்ளார்.
எஸ்.டி.ஆர். 48 படத்தின் செட் போடுவதற்கான மினியேச்சர் வடிவத்திற்கான வேலைப்பாடுகள் முழு தீவிரமாக செய்து வருகிறோம். இதன் 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் இருக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என கூறியுள்ளார். இப்படம் முழுக்க முழுக்க வரலாற்று ஃபேண்டசி திரைப்படமாக உருவாகவுள்ளது என்றும் இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல் கல்லாக அமையும் என கூறியுள்ளார். படத்தின் அடுத்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியிடப்படும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.