இசையமைப்பாளராகக் கவனம் ஈர்த்த பிறகு, நடிகராகவும் பெயர் பெற்ற ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பேசிய போது, “கிங்ஸ்டன் படத்திற்குப் பிறகு, இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறேன். நான் அவரிடம் வாய்ப்புக்காக சென்றது இல்லை. அவரே என்னைத் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினார். நாங்கள் இப்போது அந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். விரைவில், இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன்” என்று கூறினார்.

அவர் மேலும் சொன்னது: “எனது கனவு இயக்குநர் அனுராக் காஷ்யப்புடன் வேலை செய்வது. அவரின் ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’, ‘தேவ் டி’ போன்ற படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இசையமைப்பாளராக வாய்ப்புக்காக நான் அவரது அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அப்போது, என் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பின்னணி இசையை அவரிடம் போட்டுக் காட்டினேன். அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த அனுராக், ‘கேங்க்ஸ் ஆஃப் வாஸேப்பூர்’ படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தார். இப்போது, அவரது இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன்” என்றார்.

இப்படத்திற்கான ஆரம்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கிடையில் அனுராக், தமிழில் ‘மகாராஜா’, பாலிவுட்டில் ‘Bad Cop’ படங்களில் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷும் ‘கிங்ஸ்டன்’ படத்தைத் தயாரித்து, நடித்தும் முடித்துள்ளார். இதே சமயத்தில், ‘தங்கலான்’, ‘வீர தீர சூரன்’, ‘வணங்கான்’, ‘அமரன்’ போன்ற படங்களுக்காக இசையமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இப்போது, அனுராக் – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் திரைக்கதை பணிகள் முடிந்த நிலையில், படப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டது. முதலில் இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படமாக உருவாக்க திட்டமிடப்பட்ட நிலையில், தற்பொழுது அனுராக் இதை எட்டு எபிசோட்களைக் கொண்ட த்ரில்லர் வெப்சீரிஸாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன. வெப்சீரிஸாகவோ அல்லது திரைப்படமாகவோ, எதுவாக இருந்தாலும் விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.