ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு விழாவில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் உரையாடியபோது, கூட்டத்திலிருந்து ஒரு ரசிகர், அடுத்த தளபதி நீங்கள் தான் என்று குரல் கொடுத்தார். அதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், “நடிகர் விஜயுடன் நடித்ததில் மகிழ்ச்சி. அந்த வாய்ப்பை அளித்த வெங்கட் பிரபுவிற்கு நன்றி.
அடுத்த தளபதி என்று சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. தமிழ் சினிமாவில் ஒரே ஒரு தளபதி, ஒரே ஒரு தல, ஒரே ஒரு உலகநாயகன், ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பைப் பார்த்து சினிமாவைக் கற்றுக் கொண்டவன் நான். அவர்களைப் போல கடினமாக உழைத்து, நல்ல படங்களை கொடுக்க விரும்பலாம். ஆனால், அவர்களைப் போல ஆக வேண்டும் என்று ஆசைப்படுவது முற்றிலும் தவறு,” என்று பேசினார். தற்போது அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.