தென்னிந்திய படங்களில் பிரபலமாக நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது பாலிவுட் உலகிற்கு சென்றுள்ளார். அவர் விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா நடித்த வேடத்தில் நடித்துள்ளார். ‘பேபி ஜான்’ எனப்படும் இந்த படம் இந்த வருட கிறிஸ்துமஸ் காலத்தில் திரைக்கு வருகிறது. இதன் பின்னணியில், கீர்த்தி சுரேஷ் தமிழில் சுமன் குமார் இயக்கிய ‘ரகு தாத்தா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார், அந்த படம் நேற்று ஆகஸ்ட் 15ம் தேதி திரைக்கு வந்துள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில், கீர்த்தி சுரேஷ் கூறுகையில், “பல படங்களில் பிஸியாக நடித்தாலும், ஓய்வு நேரங்களில் நான் அவ்வப்போது கதைகளை எழுதுவேன். டைரக்ஷன் துறையில் அனைத்து நுட்பங்களையும் கற்று, எதிர்காலத்தில் நான் படங்களை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. குறிப்பாக, நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் நடிக்கக்கூடிய கதையை நான் தற்போது தயார் செய்து வருகிறேன்,” என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
சூர்யாவுடன் இணைந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.