கேரள மாநிலம் திருச்சூரில் ஹரிந்தாஸ் முரளி என்ற பெயருடன் பிறந்தவரே வேடன். அவருடைய தந்தை கேரளத்தைச் சேர்ந்தவராகவும், தாய் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் கூறப்படுகிறார். திருச்சூர் ரெயில் நிலையத்திற்கருகிலுள்ள ஸ்வப்னபூமி பகுதியில் தான் அவர் வளர்ந்துள்ளார். வளர்ந்துவரும் காலப்பகுதியில் பல்வேறு ஒடுக்குமுறைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். சிறுவயதிலிருந்தே இசை மீது உள்ள ஆர்வத்தால், கவிதைகள் எழுதுதல், தமிழ் பாடல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்து பாடுதல் ஆகியவையில் அவர் தனது திறமையை வளர்த்துக்கொண்டார். பள்ளிப்படிப்பை முடித்ததும், பொருளாதார சிக்கல்களால் வேலைக்கு சென்ற வேடன், அங்கு கூட தனது பாடல்களால் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

பின்னர் எடிட்டர் பி.அஜித்தின் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு பல ராப் பாடகர்களின் பாடல்களை அறிமுகமாகக் கேட்ட வேடன், அந்த பாடல்களில் காணப்படும் வலியும் உணர்வும் அவரை ஆழமாக தாக்கி, தானும் தனது சமூக மற்றும் வரலாற்றுப் பின்னணியையும், போரின் தாக்கங்களையும் அறியத் தூண்டியதாக கூறப்படுகிறது.
அதன்பின், வேடன் தனக்கே உரிய பாணியில் ராப் பாடல்களை எழுதத் தொடங்கினார். சுயாதீன ராப் பாடகராக 2020ஆம் ஆண்டு அவர் தனது ‘வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்’ என்ற ஆல்பத்தை வெளியிட்டார். இதில் அவர் எழுதி பாடிய பாடல்கள், அவர் கடந்து வந்த பாதை, சாதிய ஒடுக்குமுறைகள், அரசியல் நிலைப்பாடுகள் போன்றவை பேசப்பட்டன.2023ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மற்றும் வெற்றி பெற்ற ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘குத்தந்திரம்’ பாடலின் மூலம் அவர் ரசிகர்களிடம் பெரும் கவனம் பெற்றார். இதன் பின்னர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றத் தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் டோவினோ தாமஸ் மற்றும் சேரன் நடித்த ‘நரிவேட்டை’ திரைப்படத்தில் ‘வாடா வேடா’ என்ற பாடலை வேடன் எழுதி பாடியுள்ளார். பழங்குடியினரின் போராட்டம் மற்றும் அதிகாரத்தினரின் ஒடுக்குமுறைகளை முன்னிறுத்தி எழுதப்பட்ட இந்தப் பாடலின் வரிகள் பரவலாக கவனம் பெற்றுள்ளன. பல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதோடு, அவர் சுயாதீன இசை ஆல்பங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது பாடல்களுக்கு பெருமளவு ரசிகர்கள் உள்ளனர். அதேவேளை, அவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார்.