பேஷன் துறையில் இருந்து திரைப்பட உலகிற்குள் வந்தவர் சஞ்சனா நடராஜன். ‘நெருங்கி வா முத்தமிடாதே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், அதன் பிறகு ‘இறுதிச்சுற்று’, ‘ஜெகமே தந்திரம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155759.png)
சமீபத்தில் அவர் நடித்த ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அவர் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக நடித்துள்ளார். மேலும், இது முதல் முறையாக அவர் கதாநாயகியாக நடித்த படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய உணர்வுபூர்வமான நடிப்பு பாராட்டுக்குரியதாக இருந்தது, மேலும் அது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பேசப்பட்டு வருகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000155761.png)
இந்த திரைப்படம் குறித்து அவர், “என்னுடைய சமீபத்திய படமான ‘பாட்டல் ராதா’க்கு கிடைத்திருக்கும் ஆதரவும் பாராட்டுகளும் எனக்கு பேரானந்தத்தை அளிக்கிறது. ‘அஞ்சலம்’ கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது. மிகுந்த அழகுடன், நேர்த்தியாகவும் இயல்பாகவும் எழுதப்பட்ட இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இயக்குநர் தினகரன் சிவலிங்கத்திற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன். மேலும், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ரசிகர்கள் அளிக்கும் உற்சாகமே எனது ஆர்வத்தை மேலும் தூண்டுகிறது. எதிர்காலத்தில் உயர்தரமான திரைப்படங்களின் ஒரு பகுதியாக இருப்பதற்காக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.