வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞராகவும் சிகை அலங்கார நிபுணராகவும் இருக்கும் ஹேமா, பல முன்னணி நடிகைகளுக்கு மேக்கப் மேனாக இருந்து வருகிறார். அண்மையில், தனது மேக்கப் அனுபவம் குறித்து இந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
“ஒருமுறை நான் அமலாபாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். அந்த நேரம் ஏப்ரல் மற்றும் மே மாதம் என்பதால் கடுமையான வெயிலாக இருந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலோ, மரமோ இல்லாததால், எங்கும் உட்கார முடியவில்லை. இதனால் அங்கிருந்த சில பெண்கள் தவித்தோம். அங்கேயிருந்த கேரவேனுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டோம். ஆனால் நாங்கள் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே அமலாபால் தனது மானேஜரை அழைத்துத் எங்களை வெளியேற்றும்படி கூறினார். இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போய் நிற்பது என்று யோசித்தோம். நாங்கள் இறங்கும் வரை அவர் விடவில்லை. அதனால் கேரவனை விட்டு இறங்கினோம்.
அந்த படப்பிடிப்பு முடியும் வரை இதுபோன்ற சம்பவம் எனக்கு நிறைய ஏற்பட்டது. நான் பல ஸ்டார் நடிகைகளுக்கு மேக்கப் போட்டு இருக்கிறேன். அவர்கள் அனைவரும் மிகவும் கனிவாக நடந்து கொள்வார்கள். குறிப்பாக நடிகை தபு, எங்களைப் போன்றவர்களுக்காக வேனையெல்லாம் புக் செய்து எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். ஆனால், அமலாபால் மனிதாபமே இல்லாமல் நடந்து கொண்டார். படப்பிடிப்பில் மிக முக்கியமான நபர்களில் ஒருவர் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் மேக்கப் கலைஞர்கள் தான். அவர்கள் தான் கேமராவில் நடிகர்கள் மற்றும் நடிகைகளை அழகாகக் காட்டுகிறார்கள். இருந்தாலும், பல நேரங்களில், அவர்களுக்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ கொடுக்கப்படுவதில்லை என்று மேக்கப் கலைஞர் ஹேமா தனது பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.