தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறையை மையமாகக் கொண்டு, “300 கோமாளிகள்” என்ற திரைப்படத்தை பா. கிரிஷ் இயக்கியுள்ளார். இதில் அலெக்ஸ், செல்ல முத்தையா, அக்னி மோகன், விக்னேஷ் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் ஆர். கே. செல்வமணி கலந்து கொண்டு உரையாற்றிய போது, “எல்லோரும் கடுமையாக உழைக்கிறோம். ஆனால், நம்முடைய உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைப்பதில்லை; வெற்றிக்கேற்ற சம்பளம்தான் வழங்கப்படுகிறது. சினிமாவை ஒரு முறையான தொழிலாக அரசு அங்கீகரிக்க வேண்டும் என்பதே நம்முடைய முயற்சி.
ஒரு திரைப்படத்தில் யார் யார் பணியாற்றுகிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு அனுபவம் உள்ளது? என்ற விபரங்களை தரவாக திரட்டி அரசிடம் சமர்ப்பிக்கலாம். இதனை அடிப்படையாகக் கொண்டு சினிமாவை தொழிலாக அரசு அங்கீகரிக்க வேண்டுமென்று கோரலாம். ஹாலிவுட்டில் நடிகர்களின் சம்பளம், வெற்றி/தோல்வி ஆகியவை அனைத்தும் வெளிப்படையாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் சினிமாவில் அந்த வெளிப்படைத்தன்மை இல்லை. இதுவே சினிமா துறையில் வீழ்ச்சிக்கு காரணமாகின்றது” என்று தெரிவித்தார். மேலும், “300 கோமாளிகள்” திரைப்படம் 14-வது கொல்கத்தா சர்வதேச குறும்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.