தனுஷ் நடிப்பில் வரும் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்பட உள்ள திரைப்படம் ‘குபேரா’. இது தனுஷின் 51வது திரைப்படமாகும். இந்தப் படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில், நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். மேலும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஜூன் 1) சென்னை நகரில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய தனுஷ், “எனக்கு எதிராக எத்தனை எதிர்மறையான கருத்துகளையும் உருவாக்கலாம். ஆனால் என்னுடைய திரைப்பட ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது. என் பின்னால் என்னுடைய ரசிகர்கள் இருக்கிறார்கள்! என்னைப் பற்றி தவறான விமர்சனங்கள் கூறுபவர்கள் சற்றுத் தள்ளி நின்று உங்களது விளையாட்டை நடத்துங்கள். இந்த மாதிரியான சர்க்கஸ் இங்கு வேண்டாம்.
இங்கு இருக்கிறவர்கள் என் ரசிகர்களாக மட்டுமல்ல, கடந்த 23 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வரும் என் நண்பர்களும், என் வாழ்வின் துணைகளும். நீங்கள் சும்மா சில வதந்திகளை கிளப்பி என்னை முடித்து விடலாம் என்று நினைத்தால், அதைப் போல முட்டாள்தனமான யோசனை வேறு எதுவும் இருக்க முடியாது. உங்களால் ஒரு செங்கல் கூட எடுக்க முடியாது,” எனக் கடுமையாக பதிலளித்தார்.
பின்னர், தனது ரசிகர்களை நோக்கி, “எண்ணம் போல் வாழ்க்கை. மகிழ்ச்சியை வெளியே தேட வேண்டாம். உங்கள் உள்ளேயே சந்தோஷம் இருக்கிறது. சில நேரங்களில் நான் உணவில்லாமலும் இருந்திருக்கிறேன். ஆனால் இன்று ஒரு நல்ல நிலைக்குப் வந்திருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும் நான் எப்போதும் சந்தோஷமாக இருப்பேன். ‘குபேரா’ போன்ற ஒரு திரைப்படம் இப்போது உலகத்திற்கு தேவை. என்மேல் நம்பிக்கை வையுங்கள். இந்தப் படம் மிக முக்கியமானது. இந்தப் படத்தின் மீதான எனது நம்பிக்கை மிகுந்தது,” என தெரிவித்தார்.