இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம் பேசுகையில், “யுவன் ரசிகர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். தினமும் என்னிடம் கேவலமான வார்த்தைகளில் மெசேஜ்கள் வருகின்றன. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு யுவன்தான் இசையமைப்பதாக இருந்தது. அவருக்கு முன்பணம் கூட கொடுத்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் மதன் கார்க்கி ‘இந்த படத்தில் அதிக பாடல்கள் இருந்தால் நல்லதாக இருக்கும்’ என்று கூறினார். அதே நேரத்தில், நாங்கள் ரோட்டர்டாம் திரைப்பட விழாவுக்குப் படத்தை கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் யுவன் துபாயில் இருந்தார்.

இந்த சூழ்நிலையால் அவர் பாடல்களை இசையமைக்க முடியவில்லை. அவர் பின்னணி இசையை மட்டும் அமைப்பதாக கூறினார். அதன் பிறகு தான் சந்தோஷ் தயாநிதி எங்களுடன் சேர்ந்து பாடல்களை தயாரித்தார்,” என கூறினார். இயக்குநர் ராம் தொடர்ந்தும் கூறுகையில், “நானும் மாரி செல்வராஜும் யுவனின் ரசிகர்கள்தான்.இந்த படம் எளிமையாக எடுத்தாலும், தேவையான செலவுகளைச் செய்து உருவாக்கியுள்ளோம். நானும் சிவா சார் ஒரே ஆண்டில் சினிமாவில் அறிமுகமாகினோம். நான் ‘கற்றது தமிழ்’ எடுத்தபோது, அவர் ‘சென்னை 28’ படம் மூலம் வந்தார்.
சிவா சார் கேமரா முன் எதற்கும் தயங்காமல் சுலபமாக நடித்துவிடுவார். இந்த படத்தில் நடித்த சிறுவனுக்கு சைக்கிள் ஓட்டுவது முதல் பல விஷயங்களை நாங்கள் சொல்லிக்கொடுத்தோம். ஆனால் நடிக்க சொல்லி கொடுக்கவேண்டியதில்லை. இயல்பாகவே நடித்து விட்டார். எனது உதவியாளர் நடிக்கக் கூறும்போது, அது காட்சியளவில் இயற்கையாக இல்லையென்று சொல்லிவிட்டுப் போய்விடுவான்.
நான் மன அழுத்தத்தில் இருக்கும்போது, மிஷ்கின் சார் அலுவலகத்திற்கு செல்வேன். அவர் என் தாத்தாவைப் போலவே இருக்கிறார். எனது ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தை மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அது தள்ளிவிட்டது. அதன் விளைவாக ‘பறந்து போ’ படத்தின் ப்ரோமோஷனும் தாமதமானது,” என்று தெரிவித்தார்.