கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘கண்ணப்பா’ எனும் பெயரில் படம் இயக்கியுள்ளார் பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபுவின் மகன் மற்றும் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் படத்தில் மோகன்லால், பிரபாஸ், சரத்குமார், மதுபாலா, மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அத்துடன், அக்ஷய் குமார் சிவனாகவும், காஜல் அகர்வால் பார்வதி தேவியாகவும் நடிக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் விஷ்ணு மஞ்சு பேசும்போது, “இந்தப் படத்தை எடுப்பது எங்கள் குடும்பத்திற்கு ஒரு பாக்கியம். இப்படம் உருவாகும் போதே பல அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்தன. நானே கண்ணப்ப நாயனாராக நடித்துள்ளேன். கதைக்கேற்ப ஒரு மலை, ஒரு ஆறு, அருகில் சிவன் இருந்த பழமையான இடத்தைக் தேடியபோது, நியூசிலாந்தில் அந்த இடம் கிடைத்தது. கடும் குளிரும் வெயிலும் இருந்தபோதும், படப்பிடிப்பு நடந்தது. நாங்கள் சிவலிங்கம் அமைத்தபோது அருகில் சிலந்தி கூடு கட்டியது. அது நிஜ கண்ணப்ப நாயனார் புராணத்துடன் தொடர்புடையதாக இருந்தது. அதற்குப் பின் முறையாக பூஜை செய்து படப்பிடிப்பை தொடங்கினோம்.
இந்திய அளவில் முன்னணி நடிகர்கள் அனைவரும் இதில் நடித்துள்ளனர். காளஹஸ்தி புராணம் மற்றும் அதில் வரும் பாடல்களைச் சேர்த்து பல தகவல்களை சீன்களாக மாற்றி உள்ளோம். அக்ஷய் குமார் சிவனாக? கமர்ஷியல் படங்களில் நடிக்கும் காஜல் பார்வதியாக? என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் படம் பார்த்த பின்பு, அவர்கள் அந்த கதாபாத்திரத்திற்கு பூரணமாக ஏற்றவர்கள் என்று உணர முடிகிறது. என் மகள்கள் மற்றும் மகனும் இதில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகும். இது சிவனின் ஆசிர்வாதத்துடன் எடுக்கப்பட்ட படம் என்று நாங்கள் உணருகிறோம்,” என்றார்.