நடிகர் விஷாலின் உடல்நிலையை பற்றி அவ்வப்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, மதகஜராஜா திரைப்பட ப்ரோமோஷன் விழாவில் அவர் பேசும் போது கை நடுங்கியதும், வார்த்தைகள் குளறியதுமே பல்வேறு கருத்துக்களை உருவாக்கியது. இதற்கான காரணமாக பல்வேறு யூகங்கள் வெளியானதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால், வைரல் காய்ச்சலே இதற்கான காரணம் என விஷால் தரப்பினர் விளக்கம் அளித்தனர். உரிய சிகிச்சைகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பினார்.

இந்நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற கூவாகம் திருநங்கை அழகி போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற விஷால், மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கான காரணம் குறித்து விஷாலின் மேனேஜராக உள்ள ஹரி கூறுகையில், அதிகமான கூட்டமும், உணவு உட்கொள்ளாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதால்தான் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இந்த சூழலில், தனது உடல்நிலை குறித்து விஷால் நேரடியாக அவரது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “மது, சிகரெட் போன்ற அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டு ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. என்னை விமர்சிக்கின்றவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களது வார்த்தைகள் என்னை பாதிக்காது. நான் விரைவில் முழுமையாக மீண்டு வருவேன். எனக்காக ஆதரவு தெரிவிக்கும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு, ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.