‘சித்தா’ படத்தை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் தனது 62வது படமான ‘வீர தீர சூரன்’ படத்தில் நடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்த இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மதுரையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘வீர தீர சூரன்’ படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.
ஆனால், இப்படத்திற்கு நிதி அளித்ததால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதி பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாகவும் கூறி, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில், ‘வீர தீர சூரன்’ படத்தை தயாரித்த ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் படம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் 48 மணி நேரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட தடையை 4 வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன்பின், தயாரிப்பு நிறுவனமும், படத்தில் முதலீடு செய்த B4U நிறுவனமும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு எட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, இயக்குனர் அருண் குமார், பட வெளியீடு தாமதமானதற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரி ஒரு வீடியோ வெளியிட்டார். தற்போது, ‘வீர தீர சூரன்’ படம் மாலைக் காட்சி முதல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.