இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (48), கடந்த 25ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். மணிரத்னத்தின் ‘பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ (1999) படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர், ‘வருஷமெல்லாம் வசந்தம்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘ஈரநிலம்’ போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தார். இடையில் ‘சமுத்திரம்’, ‘மகா நடிகன்’, ‘அன்னக்கொடி’ உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.

ஷங்கரின் ‘எந்திரன்’ படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.2023ஆம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதில் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார். இந்நிலையில், அவரது திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீலாங்கரையில் உள்ள மனோஜின் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதில், முதல்வர் ஸ்டாலின் முதல் பல திரைப்பிரபலங்கள் வரை மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினர். பின்னர், மனோஜின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், வி.சி.க. தலைவர் திருமாவளவன், பாரதிராஜாவின் வீட்டுக்கு நேரில் சென்று, மனோஜின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, பாரதிராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.