Touring Talkies
100% Cinema

Thursday, May 1, 2025

Touring Talkies

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படம் எப்படி இருக்கு?- திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இலங்கையில் ஏற்பட்ட கடும் வறுமையால் பாதிக்கப்பட்ட சசிகுமார் தனது மனைவி சிம்ரன் மற்றும் இரு மகன்களுடன் உயிர் தப்பிக்க யாருக்கும் தெரியாமல் கள்ளத்தோணி மூலம் ராமேஸ்வரம் வருகை தருகிறார். பின்னர் ஒரு காரில் சென்னையில் வசிக்கும் சிம்ரனின் சகோதரர் யோகி பாபுவின் வீட்டிற்கு தஞ்சம் புகுகின்றனர். யோகி பாபுவின் உதவியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பக்ஸின் வீட்டில் தங்களை கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வாடகைக்கு குடியேறுகின்றனர். சில நாட்களிலேயே சசிகுமாரின் குடும்பம் அந்தக் காலனியில் வசிக்கும் அனைவருடனும் நெருக்கமாக பழகி, அவர்களது நெஞ்சங்களில் இடம்பிடிக்கின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு தாக்குதலுக்கு சசிகுமார் குடும்பமே பொறுப்பேற்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு போலீஸ் அதிகாரி அவர்களைத் தேடி சென்னைக்கு வருகிறார். அதன் பிறகு என்ன நடந்தது? இந்த சதிக்குள் சிக்கினார்களா அல்லது தவிர்ந்தார்களா என்பதே திரைப்படத்தின் முக்கியமான தொடர்ச்சிக் கதை. உலகின் பல பகுதிகளில் நடைபெறும் போர்களால் அல்லது பஞ்சத்தால் வாழ்விழப்பதை விட, எங்கேயாவது சென்று உயிரோடு இருப்பதையே முக்கியமாகக் கருதும் அகதிகளின் மனநிலை, அந்த உணர்வுகளை சிரிப்போடு கலந்து இயக்குநர் அபிஷன் படமாக்கியுள்ளார்.

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மட்டுமல்லாது, அவர்கள் கொண்டிருக்கும் மனதளவிலான நல்லெண்ணம், அன்பு மற்றும் மனிதநேயத்தையும் இயக்குநர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார். தனது முதல் படமாக இருந்தாலும், மிகுந்த அனுபவம் வாய்ந்த இயக்குநர்போல் உணர்வுப் பூர்வமாகவும், நகைச்சுவையோடு கலந்து ரசிக்க வைக்கும் விதமாக காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

திரைப்படத்தின் முழுப் பாரமும் சசிகுமாரின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. அவருக்கு மிகச்சிறந்த துணையாக சிம்ரன் மற்றும் அவர்களது பிள்ளைகளாக நடித்துள்ள இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இப்படத்தின் தொடக்க முதல் இறுதிவரை இவர்கள் நடிப்பே கதையை தொடர்ந்து இழுத்துச் செல்கிறது. குறிப்பாக சசிகுமார் பல காட்சிகளில் வலுவாக சாதித்துள்ளார். இலங்கைத் தமிழில் பேசிய அவரின் வசனங்கள் மக்களை ரசிக்க வைத்துள்ளது. ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவராகவும், இரு பிள்ளைகளின் அன்னையாகவும் சிம்ரன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வசந்தி என்ற கதாப்பாத்திரத்தை அப்படியே வாழ்ந்துள்ளார்.

“ஆல்தோட்ட பூபதி நானடா” என்ற பாடலுக்காக மேடையில் ஆடிய அவரின் நடனத்துக்கு ரசிகர்களிடையே சின்ன வெடிகுண்டு போலக் க்ளாப்ஸ் வெடித்தது. டீன் ஏஜ் மகனாக நடித்துள்ள மிதுன் ஜெய்சங்கர், இன்றைய தலைமுறையின் சிந்தனைகளை பிரதிபலித்துள்ளார். இளைய மகனாக நடித்த கமலேஷ் தனது அக்கறையற்ற நடிப்பால் படத்திற்கு நல்ல வேலையை செய்துள்ளார். யோகி பாபு வரும் காட்சிகள் மிகுந்த ரசிப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அவர் சிம்ரன் பெயரை உச்சரிக்கும் போது ரசிகர்களிடம் விசில்கள் எழுகின்றன. எம். எஸ். பாஸ்கர், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி, பக்ஸ் மற்றும் யோகலட்சுமி ஆகியோர் தங்களது நடிப்பால் திரைக்கதைக்கு வலுசேர்த்துள்ளனர். போலீஸ் அதிகாரியாக வந்துள்ள ரமேஷ் திலக் தனது வேலையை மிகச்சிறப்பாகச் செய்துள்ளார்.

படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது ஷான் ரோல்டனின் இசை மற்றும் அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு ஆகும். இந்த இரண்டு அம்சங்களும் அழகான கதைக்கு மேலும் உயிரூட்டும் வகையில் திரைப்படத்தினை ஒரு படி உயர்த்துகின்றன.

- Advertisement -

Read more

Local News