நடிகர் மம்மூட்டி கடந்த ஏழு மாதங்களாக உடல்நலக் காரணத்தால் முழுமையாக ஓய்வில் இருந்தார். இதனால் அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது அவர் மீண்டும் சுறுசுறுப்பாக திரையுலக பணிக்குத் திரும்பியுள்ளார். நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் நோக்கிப் புறப்பட்டு சென்றார்.

இதை தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “சிறிய இடைவெளிக்குப் பிறகு, நான் என் வாழ்க்கையில் மிகவும் விரும்பிய செயலைச் செய்யத் திரும்பியுள்ளேன். கேமரா அழைக்கிறது!” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானதும், அவருடைய ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
இதனிடையே, மம்மூட்டி நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. அந்த படத்தின் பெயர் MMMN என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படக்குழுவின் தகவலின்படி, இதில் நடிக்கும் மோகன்லால், மம்மூட்டி, மகேஷ் நாராயணன் ஆகியோரின் பெயர்களின் ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்துகளை ஒன்றுசேர்த்து இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்தின் டீசர் நாளை நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மம்மூட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவும் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.