2018-ஆம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் விமர்சகர்களிடமும் பார்வையாளர்களிடமும் பெரும் பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ மற்றும் ‘வாழை’ போன்ற திரைப்படங்களை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்போது, ‘ஆதித்யா வர்மா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘பைசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்த திரைப்படம் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதையாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.