வாடிவாசல் படத்தின் பணிகள் தொடங்கியதை அறிவிக்கும் விதமாக, தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இசைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக, நேற்றைய தினம் நடைபெற்ற ‘கிங்ஸ்டன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் கல்லூரியில் நடந்து வரும் கல்ச்சுரல்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர், “வாடிவாசல் திரைப்படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மே அல்லது ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும்” என்று கூறினார்.
‘வாடிவாசல்’ படத்திற்குப் பிறகு, தனுஷை வைத்து மற்றுமொரு படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ‘விடுதலை பாகம் 2’ திரைப்படம் வெளியான பிறகு வெளியிடப்பட்டது.சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘சூர்யா 45’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு, ‘வாடிவாசல்’ படப்பிடிப்பில் சூர்யா பங்கேற்க உள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது.