இலங்கை தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தற்போது அதிக படங்கள் உருவாகி வருகிறது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த “டூரிஸ்ட் பேமிலி” படம் வெளியானதும், அது வெற்றி பெற்றதும் இதற்கு ஒரு உதாரணமாகும். இதைத் தொடர்ந்து, சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் “பிரீடம்” என்ற படமும் இலங்கை அகதிகளை பின்னணியாகக் கொண்டதாகும்.
அதேபோல், தமிழ்நாட்டில் குடியேறியுள்ள அகதிகளை மையமாகக் கொண்டு “இரவுப்பறவை” என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களில் ஒருவரான ஒரு பெண், இந்நாட்டில் குடியுரிமை பெற போராடும் கதையுடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை “தமிழ் திரை சேனல்” நிறுவனத்தின் சார்பில் வி.டி. ராஜா மற்றும் ஆர். பாண்டியன் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை எழுதி இயக்கியவர் வேதாஜி பாண்டியன். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யா, இலங்கையைச் சேர்ந்த நந்தினி, ‘நிழல்கள்’ ரவி, சிவா, டாக்டர் ஆர். பாண்டியன் மற்றும் செல்வகுமாரன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பகவதி பாலா செய்துள்ளார். பாடல்களுக்கு ஆல்வின் கலைபாரதி வரிகள் எழுதி இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகிற 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.