Touring Talkies
100% Cinema

Sunday, April 27, 2025

Touring Talkies

‘சுமோ’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சென்னையில் உள்ள விடிவி கணேஷின் உணவகத்தில் மிர்ச்சி சிவா வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஒரு நாள் கடற்கரைக்கு சென்ற போது, அங்கு ராட்சச உருவத்துடன் ஒருவரை மயக்க நிலைமையில் கிடந்துகொண்டு காண்கிறார். அவரை மீட்டு, தாம் வேலை செய்யும் உணவகத்திற்குக் கொண்டு வருகிறார். அந்த வெளிநாட்டவரை பார்த்ததும், விடிவி கணேஷ் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார். மிர்ச்சி சிவாவும் அவரை அழைத்துச் சென்று போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கிறார். விசாரித்த இன்ஸ்பெக்டர், அவரை போலீஸ் நிலையத்தில் வைத்துக்கொள்ள முடியாது, நீங்களே அவரைக் கவனிக்க வேண்டும் என கூறி அனுப்புகிறார்.

தன் உயிரை காப்பாற்றிய மிர்ச்சி சிவாவை, கடவுளைப் போல் பார்ப்பதுடன், பழைய நினைவுகளை இழந்த அந்த வெளிநாட்டவரை குழந்தையைப் போல பராமரிக்கிறார் சிவா. பின்னர், அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, பல்வேறு வழிகளில் அவரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார். ஒருநாள், அவரை ஒரு நிகழ்விற்குக் கொண்டு செல்லும் போது, அங்கு காணப்படும் ரஜினி படமும், ஜப்பான் நாட்டின் கொடியும் அவரை அதிர்ச்சி அடையச் செய்கின்றன. அதைப் பார்த்தவுடன் அவர் சற்றும் நகராமல் நிற்கிறார்.

அடுத்து ஒரு கட்டத்தில், அவர் ஒரு சுமோ வீரர் என மிர்ச்சி சிவா கண்டுபிடிக்கிறார். பின்னர், அவரை மீண்டும் ஜப்பானுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவிற்கு வந்து, அதற்கான முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் ஏன் ஜப்பான் கொடியைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார்? உண்மையில் அவர் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? அவருக்கு நினைவுகள் திரும்பியதா? அதன் பிறகு என்ன நடந்தது? என்பவை படத்தின் மீதிக் கதையாகும்.

இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் தொடங்காத வகையில் புதிய கதைக்களத்தை இயக்குனர் எஸ்.பி.ஹோசி தேர்வு செய்துள்ளார். இருப்பினும், திரைக்கதை போதுமான சுவாரஸ்யம் இல்லை என்பதால், படம் அதிகமாக ரசிக்க முடியவில்லை. வழக்கமாக மிர்ச்சி சிவா பேசும் பஞ்ச் வசனங்களும் இங்கு குறைவாகவே காணப்படுகின்றன. திரைக்கதையில் இடம்பெற்றுள்ள நகைச்சுவை காட்சிகளும் பெரிய அளவில் நன்றாக இல்லை. கதாபாத்திரங்களை உருவாக்கிய விதமும் திறமையாக இல்லை. படத்தின் மையமான கதாபாத்திரம் சுமோ வீரரே ஆக இருக்கிறார்.

சிங்கிளாக இருந்தாலும் எதையாவது செய்து சிரிக்க வைப்பது மிர்ச்சி சிவாவின் சிறப்பு. ஆனால், இந்தப்படத்தில் ஹீரோ என்ற பெயரில், அவருடன் சுமோ வீரரை தொடர்ந்து உடன் வைத்திருப்பது சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது. பிரியா ஆனந்த் வழக்கமான ஹீரோயினாக வந்து சில காட்சிகளுக்குப் பிறகு மறைவதைப் போல இருக்கிறார். விடிவி கணேஷின் கதாபாத்திரமும் தனிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. தேவையில்லாமல் யோகி பாபுவும் இதில் இடம்பெற்றிருப்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. ‘காமெடியாவது வேலை செய்யும்’ என எதிர்பார்த்தால், அதிலும் ஏமாற்றமே அதிகம். இப்படத்தில் நடிகர் சதீஷ் சிறிய தோற்றத்தில் (கேமியோ) காட்சியளிக்கிறார்.

பல கதாபாத்திரங்கள் இருந்தும், படம் முழுவதும் ஏதோ ஒன்று மிஸ்ஸாகி இருப்பது போல் உணர்ச்சி ஏற்படுகிறது. படத்தின் ஒளிப்பதிவு ரசிக்கத் தக்கதாக இருந்தாலும், எடிட்டிங் மிக மோசமாக உள்ளது. இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா வழங்கிய இசை மட்டுமே படத்திற்கு சிறந்த பலமாக அமைந்துள்ளது. புதுமையான கதைக்களம் மற்றும் ஜப்பான் நாட்டில் படம் பிடிக்கப்பட்ட விதமும் சிறப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக, இந்த படத்திற்கு உயிரளிக்கும் முக்கிய காரணி நிவாஸ் கே. பிரசன்னாவின் இசைதான்.அதனால், இத்திரைப்படத்தை ஒருமுறை தாரளமாகக் கண்டு ரசிக்க முடியும்.

- Advertisement -

Read more

Local News