பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில் அமைந்துள்ளது. அங்கு நேரில் சென்று, பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனை சந்தித்து, மிக வேகமாக வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாக விவாதித்தார் இந்திய திரைப்பட உலகின் தலைசிறந்த நட்சத்திரமான கமல்ஹாசன்.
இந்தச் சந்திப்பைப் பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,சினிமா துறையிலிருந்து கணினி துறையினை நோக்கி, உபகரணங்கள் பல முன்னேற்றங்களை கண்டுள்ளன. இருப்பினும், அடுத்த கட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்பது பற்றிய தேடல் தொடர்ந்துகொண்டே உள்ளது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற அடிப்படையில் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகும் அரவிந்த் ஸ்ரீநிவாசனும், அவரது குழுவும் உருவாக்கியிருக்கும் இந்திய அறிவாற்றல் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான் ஃபிரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்ற போது எனக்குள் பெரும் ஆர்வம் ஏற்பட்டது.
ஆங்கிலத்தில் “Curiosity kills the cat” என்ற பழமொழி உள்ளது. ஆனால், இங்கே அந்த ஆர்வம் பூனைக்கு தீங்கிழைக்கவில்லை; அரவிந்த் ஸ்ரீநிவாசனை உருவாக்கியிருக்கிறது! எனும் பெருமிதத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.இதற்குப் பதிலளித்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ், தனது எக்ஸ் தள பதிவில், கமல்ஹாசனை சந்தித்த அனுபவத்தைப் பகிர்ந்தார். அதில், “பெர்ப்லெக்ஸிடி அலுவலகத்தில் உங்களை நேரில் சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்நேரத்தில், அந்த வளர்ச்சியை திரைப்படத் துறையில் இணைக்க நீங்கள் காட்டும் ஆர்வம் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. தற்போது நீங்கள் பணியாற்றும் ‘தக் லைஃப்’ திரைப்படம் மற்றும் எதிர்காலத்தில் வரும் மற்ற படங்களும் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.