‘வீர தீர சூரன்’ திரைப்படத்துக்குப் பிறகு, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார்-2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் தெலுங்கில் நானி நாயகனாக நடித்த ‘சரிபோதா சனிவாரம்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகையில் உருவான இப்படத்தில், பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு, தெலுங்கானா அரசு சிறந்த துணை நடிகருக்கான விருதை அறிவித்துள்ளது. இதையடுத்து, நானி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவொன்றை பகிர்ந்திருந்தார்.

அந்த பதிவில், “வாழ்த்துகள் சார்! இந்தப் படத்தில் நீங்கள் சிறந்த துணை நடிகர் மட்டுமல்ல, எல்லாமே நீங்கள்தான். இந்த விருதை பெறுவதற்கு முழுமையான தகுதி உங்களுக்கு இருக்கிறது” என குறிப்பிட்டார். அதற்குப் பதிலாக எஸ்.ஜே.சூர்யா, “மிக்க நன்றி நானி சார்” என பதில் அளித்திருந்தார்.
இந்த பதில் போதுமானதல்ல என உணர்ந்த எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “மன்னிக்கவும் நானி சார். படப்பிடிப்பில் மிகப் பிஸியாக இருந்த காரணத்தால், உங்கள் பாராட்டுக்கு உரிய பதிலை உடனே அளிக்க இயலவில்லை. ‘நன்றி’ என்று சொல்வது மட்டும் போதாது. நீங்கள் மட்டுமல்ல, இயக்குனர் விவேக்கும் எனக்கு முழுமையான ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகவே இருக்காது. உங்கள் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி. திரையில் மட்டுமல்ல, உங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒரு உண்மையான ஹீரோவாகவே நீங்கள் இருக்கிறீர்கள என்று கூறியுள்ளார்.