பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு நாளை 60வது பிறந்த நாளாகும். இந்த பிறந்த நாளை அவர் தனது பாலிவுட் நண்பர்களுடன் முன்கூட்டியே கொண்டாடியுள்ளார். இதற்காக, நேற்று இரவு நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகர் ஷாருக்கான், மும்பை பாந்த்ராவில் உள்ள ஆமீர் கான் இல்லத்திற்கு வந்தனர்.

ஆமீர் கான் இல்லத்திற்கு சல்மான் கான் வருகையளித்தபோது, பத்திரிகையாளர்கள் அவரை புகைப்படம் எடுக்க அனுமதித்தார். ஆனால், ஷாருக்கான் பத்திரிகையாளர்களை தவிர்த்துவிட்டு நேராக வீட்டிற்குள் சென்றுவிட்டார். ஷாருக்கானுடன் அவரது தனிப்பட்ட செயலாளர் பூஜா மற்றும் சில நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் இரவு நேரம் முழுவதும் நீடித்தது. பார்ட்டி முடிந்ததும், ஆமீர் கான் வாசல் வரை வந்து, இரண்டு பேரையும் ஆரத்தழுவி வழியனுப்பினார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சல்மான் கான் வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்திருந்தார்.
பாலிவுட்டில், மூன்று கான்கள் (ஆமீர், சல்மான், ஷாருக்) இணைந்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. எனவே, இந்த பிறந்தநாள் விழாவில் மூவரும் இணைந்து நடிப்பது குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது. மூவரும் ஒரே திரையில் தோன்றுவது மிகவும் அபூர்வம். சமீபத்தில், ஆமீர் கான் மகனின் புதிய படத்திற்கான சிறப்பு காட்சியில் மூவரும் கலந்து கொண்டனர்.
சல்மான் கான் நடித்த “சிகந்தர்” படம் இம்மாத இறுதியில் வெளியாகிறது. மேலும் ஷாருக்கான் தனது மகள் சுஹானாவை முதன்மைப்படுத்திய “கிங்” என்ற படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம், ஆமீர் கான் “ஜிதாரே ஜமீன் பர்” படத்தில் நடித்துள்ளார். ஆனால், இந்த படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.