தெலுங்குத் திரைப்படத்துறைக்காக ஆந்திர அரசு வழங்கி வந்த ‘நந்தி விருதுகள்’ மிகுந்த புகழ் பெற்றவை. 1964ஆம் ஆண்டு தொடங்கி வழங்கப்பட்டு வந்த இந்த விருதுகள், 2016ம் ஆண்டுக்குப் பின் வழங்கப்படவில்லை. ஆந்திர மாநிலம் தெலங்கானாவாகவும் ஆந்திராவாகவும் பிரிந்த பின்பே இந்த விருதுகள் நிறுத்தப்பட்டன.

இந்த ஆண்டிலிருந்து அந்த திரைப்பட விருதுகள் ‘கட்டார் விருதுகள்’ என்ற புதிய பெயரில் வழங்கப்படுவதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. நாட்டுப்புற பாடகர் மற்றும் புரட்சிகர கவிஞரான கட்டார் கடந்த 2023ல் மறைந்தார். அவரது நினைவாகவே இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
ஜெயசுதா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவே விருதுக்குரியவர்களை தேர்வு செய்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான சிறந்த படமாக ‘கல்கி 2898 ஏடி’ தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, அதன் இயக்குநரான நாக் அஷ்வின் சிறந்த இயக்குநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘புஷ்பா 2’ திரைப்படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் சிறந்த நடிகராகவும், ‘35 சின்ன கத காது’ படத்தில் நடித்த நிவேதா தாமஸ் சிறந்த நடிகையாகவும், ‘சரிபோத சனிவாரம்’ படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா சிறந்த துணை நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருதுகளை பெற்ற அல்லு அர்ஜுன், நிவேதா தாமஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் தெலங்கானா அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.