தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த டேனியல் பாலாஜி, கடந்த ஆண்டு திடீரென மறைந்தார். பல்வேறு திரைப்படங்களில் வில்லனாக நடித்த இவர், ‘ஆர்.பி.எம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதற்கு முன் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தபோதும், இது அவரது கடைசி படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
‘தி சவுண்ட் ஸ்டோரி’ படத்தை இயக்கிய பிரசாத் பிரபாகர் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இதில், டேனியல் பாலாஜியுடன் சுனில் சுகதா, கோவை சரளா, ஒய்ஜி மகேந்திரன், இளவரசு, தேவதர்ஷினி, ஈஸ்வர் கிருஷ்ணா, தயா பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனியன் சித்திரசாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு, ஜெ. செபாஸ்டியன் ரோஸாரியோ இசையமைத்துள்ளார். கோல்டன் ரீல் இண்டர்நேஷனல் புரொடக்ஷன் சார்பில் கல்பனா ராகவேந்தர் தயாரித்துள்ளார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பிரசாத் பிரபாகர் கூறும்போது, “நடிகர் டேனியல் பாலாஜி நடித்த கடைசி படம் இது. இதில், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் நடித்திருந்தது போலவே, மிகுந்த ஆளுமை கொண்ட கதாபாத்திரத்தில் அவரின் சக்திவாய்ந்த நடிப்பை காணலாம். கிரைம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
தற்போது, இப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இறுதி கட்டத்திற்குள் வந்திருக்கும் இப்படத்தின் டீசர், டிரெய்லர் விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகு, படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என அவர் தெரிவித்தார்.