புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்ப காணோம் போன்ற படங்களை இயக்கிய கே. பி. ஜெகன், உண்மை சம்பவத்தை தழுவி எழுதி இயக்கி வரும் புதிய திரைப்படம் ரோஜா மல்லி கனகாம்பரம். இப்படத்தில் இயக்குநர் கே. பி. ஜெகன் நாயகனாக நடிக்கிறார். அவருடன் விஜய் வர்மா, சங்கீதா கல்யாண், பிச்சைக்காரன் மூர்த்தி, தியா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தேசிய விருது பெற்ற எம். எஸ். பாஸ்கர் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

படம் குறித்து இயக்குநர் கே. பி. ஜெகன் கூறுகையில், “ரோஜா மல்லி கனகாம்பரம் திரைப்படத்தில் மூன்று கதைகள் ஒரே நேர்கோட்டில் நகர்வது திரைக்கதையின் தனிச்சிறப்பு. ஒவ்வொரு கதைக்கும் ஒரு பாடல் என்ற விதத்தில் மொத்தம் மூன்று பாடல்கள், மேலும் அவற்றை இணைக்கும் இடத்தில் நான்காவது பாடல் இடம்பெறும். பாடல்களும் பின்னணி இசையும் மிக முக்கியமான பங்காற்றும் படமாக இது உருவாகி வருகிறது,” என்றார்.
பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளரான விஜய் வர்மா இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு இணையாக சங்கீதா கல்யாண் நடித்துள்ளார். இவர் தற்போது வடம் திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாகவும் நடிக்கிறார். மூன்று கதைகளில் ஒன்றில் இவர்களின் கதை இடம்பெறுகிறது. திருச்செந்தூர், தூத்துக்குடி, மணப்பாடு மற்றும் குலசேகரப்பட்டினம் பகுதிகளில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இறுதி கட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற உள்ளது. மாயாண்டி குடும்பத்தார் படத்தை தயாரித்த யூனிடெட் நிறுவனம் இதனை தங்களது இரண்டாவது தயாரிப்பாக உருவாக்குகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சேரன் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

